Pages

Sunday, September 30, 2012

காஞ்சிபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் குழந்தைகள் இல்லம்

மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் கடந்தது சென்ற வார இறுதி. காஞ்சிபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் குழந்தைகள் இல்லம், அந்த பிஞ்சு குழந்தைகள் இந்த இரண்டு நாட்களிலேயே என்னை அண்ணனாக ஏற்றுகொண்டனர். சூர்யா அண்ணா சூரி அண்ணா என்று நான் கிளம்பும் வரை சூழ்ந்துகொண்ட தூய உள்ளங்கள்.
























Tuesday, September 25, 2012

நான் புரிந்துகொண்ட ஹிந்து மதம்

இங்கு பேச்சுரிமை உண்டு , நீங்கள் சிவனையும், விஷ்ணுவையும் வழிபடலாம்    வழிபடாமலும் போகலாம்.  நீ பாவம் செய்தவனாகிவிடுவாய் என்கிற பூச்சாண்டிகள் மிக குறைவு.

என்னை பொறுத்தவரை இந்த மதத்தில் கடவுள் இல்லை ! சக மனிதர்களே கடவுள் தான். இல்லாத ஒன்றைவிட இருக்கும் ஒன்றை கடவுளாக ஏற்றுகொண்ட மதம் இது. அதனால்தான் தாய் தந்தையரையும், சக மனிதர்களையும் ஏன் விலங்குகளை கூட நாங்கள் நேசிக்கிறோம். இது தான் இங்கு அடிப்படை அன்பு, பாசம். 

இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். பொங்கல் பண்டிகை ஒன்றே அதற்கு சாட்சி. ஆடு, மாடு, நாய், ஆறு, மலை, சூரியன், யானை, குதிரை, சிங்கம், புலி இப்படி பூமியல் மனிதர்கள் வாழ இடம் கொடுத்த அனைத்திற்கும் நாம் நன்றிகடன் பட்டிருக்கிறோம், அவற்றை வணங்குகிறோம் . அவைகள் நாம் புவியில் வாழ அனுமதித்தவைகள்.

இங்கு கட்டுபாடுகள் கிடையாது, மிரட்டல்கள் கிடையாது,மூலைச்சலவை கிடையாது மற்ற யாரையும் இந்த மதத்திற்கு மாறுங்கள் என்று கேட்பது கிடையாது. இது ஒரு அனுபவம், வெளியில் இருந்து பார்த்தால் மிகப்பெரிய மூட நம்பிக்கை கூட்டமாக தெரியும் ஆனால் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் இங்கு இருப்பவர்கள் அன்பில் பிணைக்க பட்டிருக்கிறார்கள். 

மற்ற மதங்களை இழிவுபடுத்தும் மக்கள் கிடையாது. அவர்கள் வழிபடும் கடவுள்கள் எங்களுக்கும் கடவுள். பெரும்பகுதி மக்கள் இந்து வாக இருப்பினும் நம்நாட்டில் மற்ற மதத்தினர் இங்கு மகிழ்ச்சியோடும் சகோதரத்துவத்தோடும் இருக்க முடிகிறது. 

இங்கு என் கைகள் கட்ட படவில்லை, சுகந்திரமாக இருக்கலாம். மற்ற மதத்தினரை கீதை படிக்க சொல்லி நான் கேட்கமாட்டேன். ஆனால் அவர்களின் புனித நூல்களை விரும்பி படிப்பேன் நல்லது எங்கு கூறபட்டிருந்தாலும் அவை  ஏற்றுகொள்ளபடுகின்றன. 



ஆனால் சாதியில் பிரிக்க பட்டிருக்கிறார்கள். இங்கும் இருக்கிறார்கள் மதப்பற்று ஓவராகி வெறியர்கலானவர்கள். ஆனால் மிக மிக குறைவு. அளவுக்கதிகமான மூட நம்பிக்கைகள், காரனம் ஹிந்து மதத்தை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோருக்கு  இந்த மதத்தை பற்றி புரிதல் இல்லை,  ஒருவேளை உருட்டி மிரட்டி வழிய திணிப்புகள் இல்லாததால் கூட இருக்கலாம்.

வருடம் முழுவதும் விசேஷங்கள் மக்களை இணைத்து வைப்பதற்கான ஒரு எளிய வழி.

இந்த பதிவு வெளியிடும் தருணம் வரை ஹிந்து மதத்தை பற்றிய எனது புரிதல் இதுதான். இது காலபோக்கில் மாறலாம் .

மேலும் மற்ற மதங்களை பற்றி எனக்கு எதுவம் தெரியாது எனவே அதை பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லை.

Friday, September 21, 2012

பிளாட்பாரத்தில் கண்ட காட்சி




இன்று நான் சாலையை கடந்து செல்லும் போது , பிளாட்பாரத்தில் கண்ட காட்சி இது,, :(  

Thursday, September 13, 2012

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!


பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

                                    

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம்  
சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

முதல் திட்டமாக கன்றுகளை இலவசமாக கொடுக்க முடிவு செய்து முகநூலில் செய்தியை பகிர்ந்தோம்...

மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், தங்கள் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க விருப்பம் இருப்பவர்களும், பள்ளி, கல்லூரிகளில் நட விருப்பம் உள்ளவர்களும் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

திருநெல்வேலி, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்தவர்கள் நேரில் வந்து பெற்று கொள்ளமுடியும். மற்றவர்கள் transport ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். 


தேவைப்படுபவர்கள் தேவைப்படும் தேதிக்கு இரண்டு நாளுக்கு முன்பே தொடர்புக் கொண்டால் நல்லது.

தொடர்பு கொள்ள

Email - admin@pasumaividiyal.org

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                            

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம்  

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
  
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
சூர்ய பிரகாஷ் 

Monday, September 10, 2012

தினம் ஒரு மரம்


அருமை இணைய உறவுகளே,

வணக்கம்.

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல் தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .





தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை நிச்சயம் ஊக்கப்படுத்தும்

* * * * *

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின் இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம். அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது 'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'.

இணைந்து செயலாற்றுவோம்.
வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...

ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
மரம் நடுவோம்!
மண் காப்போம்!!

* * * * *

பிரியங்களுடன்

சூர்ய பிரகாஷ்
பசுமைவிடியல்.

முகநூலில் பசுமை விடியல்

தகவல் - பசுமைவிடியல் தளம்