Pages

Thursday, September 13, 2012

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!


பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

                                    

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம்  
சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

முதல் திட்டமாக கன்றுகளை இலவசமாக கொடுக்க முடிவு செய்து முகநூலில் செய்தியை பகிர்ந்தோம்...

மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், தங்கள் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க விருப்பம் இருப்பவர்களும், பள்ளி, கல்லூரிகளில் நட விருப்பம் உள்ளவர்களும் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

திருநெல்வேலி, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்தவர்கள் நேரில் வந்து பெற்று கொள்ளமுடியும். மற்றவர்கள் transport ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். 


தேவைப்படுபவர்கள் தேவைப்படும் தேதிக்கு இரண்டு நாளுக்கு முன்பே தொடர்புக் கொண்டால் நல்லது.

தொடர்பு கொள்ள

Email - admin@pasumaividiyal.org

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                            

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம்  

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
  
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
சூர்ய பிரகாஷ் 

1 comment:

  1. அன்பின் சூர்ய பிரகாஷ் - அரிய செயல்கள் - சாதனை புரியுங்கள் - 10000 கன்றுகள் ஒரே நாளில் ஏற்பாடு செய்த செயல் பாராட்டுக்குரியது - மேன் மேலும் வளர நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete